Friday 23 November 2012

உண்மை, பொய்களை கடந்தவர்கள் ....

வாழ்க்கையின் உன்னதத்தையும்,சந்தோஷத்தையும் குழந்தைகளிடம் இருந்து மட்டும்தான் கற்று கொள்ள முடியும். அவர்களால் மட்டும் தான் அதை முழுமையாக வெளிப்படுத்த முடியும். இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.நம்மைப் போலின்றி எதிர்பார்ப்புகளும், போலிகளுமின்றி மிகவும் எதார்த்தமாக எல்லாவற்றையும் நேசிக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.
வாழ்க்கையும் சமூகமும் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாய் மாறிக்கொண்டே இருக்கிறது. என் பிள்ளைப் பருவத்தில் நான் பார்த்து ரசித்து விளையாடிய அனைத்தும் இன்று பெரும்பான்மை குழந்தைகளுக்கு அந்நியப்பட்டே கிடக்கிறது, இன்றைய குழந்தை வளர்ப்பு முறை, வளரும் சூழல், குழந்தைகள் மீது திணிக்கப்படும் விஷயங்கள், கல்வி என்ற பெயரில் 'கல்வியாளர்கள்' நடத்தும் வன்முறை, "அன்பு வன்முறை" - பாசம், குழந்தை வளர்ப்பு எனும் பெயரில் குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறை.
"கல்வி வன்முறையை" நாம் நன்கு அறிவோம். பள்ளிகளில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான அடக்குமுறைகளும், வன்முறைகளும் நாம் கேள்விப்பட்டதையும் படித்ததையும் விடவும் அதிகமாவே  நடக்கிறது. சில பெற்றோர்களுக்கு இது அவசியமானதே  என்று கருதுகின்றனர். அவர்களுக்கு பிள்ளைகளின் பால்ய பருவத்தைப் பற்றி கவலை  இல்லை, மிகுதியான பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளை IIT, IIM போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்த்து விடுவதே வாழ்க்கையில் பிள்ளைகளை உயர்த்தும் செயல் என்றும் கருதுகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுக்கும் சில பெற்றோர்களும் உண்டு, ஆனால் அது மிகச் சிலர் மட்டுமே. இந்த சமுகத்தில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் கல்வி, அன்பு,பாலியல்,ஊடகம் என்று இருக்கின்ற அத்துணை அமைப்புகளாலும் வன்முறைக்கு ஆளாகின்றனர்.அன்பு எனும் போர்வையில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது ஏவும் வன்முறைகளை நாம் பெரிதுபடுத்துவதில்லை. அது குழந்தை வளர்ப்பு முறைக்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் குழந்தைகள் மீது ஏவப்படும் குற்றங்களில் பெரும்பான்மையான குற்றங்கள் பெற்றோர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது.
பிள்ளைகளுக்கு counselling எனப்படும் மனநிலை ஆலோசனைகள் ஒரு trend ஆக உள்ளது. சில ஆண்டுகள் முன்பு உண்மையாகவே குழந்தைகளிடம் புரிந்து கொள்ள முடியாத மாற்றங்கள் அல்ல, செயல்கள் இருந்தால் கூட அவர்களை ஆலோசனை மையங்களுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினர். தங்கள் குழந்தையை மற்றவர்கள் மனநோயாளி என்று நினைத்து விடுவார்கள் என்று பயப்படுவர். counselling என்றாலே மனநோயுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.இப்போது நாம் அதை எல்லாம் கடந்து விட்டோம். ஆலோசனை மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள்தான் அபத்தமாக உள்ளது.
இது என்னிடம் படிக்கும் சாத்விகா என்ற குழந்தையின் கதை. அவள் அம்மா என்னிடம் பகிர்ந்து கொண்டதும் அவளின் உண்மைகளும். சாத்விகாவை எனக்கு ஓர் ஆண்டாகத் தெரியும். முதல் இரண்டு நாள் என்னிடம் பேசவே இல்லை. ஏதோ கதைகள் சொல்லி, சாக்லேட் வாங்கிக் கொடுத்து, அவள் டிரஸ் அழகாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிய பிறகே பேச ஆரமித்தாள். இப்போது அவள் நேற்று இரவு கண்ட கனவைக் கூட என்னிடம் பகிர்ந்துக் கொள்கிறாள். நான் அவளைப் பற்றி இங்கு பதிவிடுவதற்கு இரு நம்பிக்கைகள் உண்டு. ஒன்று, அவள் பெற்றோருக்கு இது சென்று அடையாது என்ற நம்பிக்கை. இன்னொன்று, அவளின் பெற்றோர் போல் இருக்கும் மற்றவர்களுக்கு எல்லாம் சென்றடையும் என்ற நம்பிக்கை.
சாத்விகா பிறந்து இரண்டு மாதத்தில் அவள் அம்மா பணிக்குச் செல்ல ஆரம்பித்தாள் தாதியின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவள் அம்மா குழந்தைக்குத் தேடி தேடி விலைஉயர்ந்த உணவு வகைகள் மட்டுமே வாங்கித் தருவார், இருந்தும் அவள் மெலிதாகவே இருந்தாள். இரண்டு வயது குழந்தைக்கு ஒரு கிண்ணம் நிறைய சாப்பாடு போட்டு அம்மா ஊட்டுவார். கொஞ்சம் சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்து விடுவாள் சாத்விகா . அம்மா கோபத்தில் பிள்ளையை அடித்து மீண்டும் சாப்பிட வைப்பார். கொஞ்ச நாட்கள் கழித்தே சாத்விகா உண்ணாததின் உண்மை புலப்பட்டது. வேலை செய்யும் தாதி குழந்தைக்கு சாப்பிடத் தரமால் அவளே அனைத்தையும் உண்டிருகின்றாள் அதுனால் சிறுமியின் குடல் சுருங்கியே இருந்திருகிறது சிறிது அதிகமாய் உண்டாலே வாந்தி எடுக்கும் நிலைக்கு ஆட்பட்டாள். .
சாத்விகாவின் அப்பா தன் பெண் தன்னுடைய நண்பர்களின் குழந்தைகளை விட ஒரு படி மேல் இருக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டுக் குழந்தை ஏதாவது வகுப்பில் சேர்ந்தால் உடனே தன் மகளையும் சேர்த்து விடுவார். சிறு வயதில் இருந்தே அளவுக்கு மீறிய பாடங்கள் கற்றுத் தரப்பட்டது. மார்க் குறைவாக வாங்கிவிட்டால் அன்றைக்கு முழுவதும் சாப்பாடு இல்லை.இப்போது சாத்விகா நான்காம் வகுப்பு படிக்கிறாள். அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். சாத்வி அம்மாவுடன் சென்னையில் வாழ்கிறாள். அவள் எப்போதும் இயல்பானவளாய் இருப்பதில்லை, எல்லாவற்றிற்கும் அச்சப்படுகிறாள் பயம் அவளோடு சேர்ந்து ஜீவிக்கிறது.
என்னைப் பொறுத்த வரை சாத்விகா அற்புதமான குழந்தை. மொழி ஆளுமை மிக்கவள். தமிழ் உச்சரிப்பு அழுத்தம் திருத்தமாக இருக்கும். ஆங்கிலமும் சரளமாகப் பேசுவாள். எதையும் எளிதாகப் புரிந்து கொள்வாள். ஆனால் ஏதாவது கேள்வி கேட்டால் நிறைய யோசித்தே பதில் சொல்லுவாள். எதையாவது செய்ய சொன்னாலும் யோசிப்பாள். அதற்கு காரணம் "பயம்". குழந்தை மனது முழுவதும் அச்சத்தால் நிரம்பி வாழ்கிறது. தான் சொல்லும் சொல்லோ அல்லது தான் செய்யும் செயலோ தன் அம்மாவையும் அப்பாவையும் திருப்திபடுத்துமா என்று சந்தேகம். அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் தான் அவளின் மிகப் பெரிய சுமை. அவர்களைத் திருப்திபடுத்துவதை விட வாழ்கையில் வேறு எதுவுமில்லை என்று அவள் நம்புகிறாள். நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடமை. எதாவது தப்பு செய்து விடுவோமா என்ற பயத்தால் மிகவும் மெதுவாகத் தான் எழுதுவாள். தவறைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் சாத்விகாவிடம் இருக்கிறது. ஆனால் தவறுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் அவள் பெற்றோருக்கில்லை.
நான் ஒரு முறை வீட்டுக்கு போனபோது முட்டி போட்டிருந்தாள். அவள் அம்மாவோ உணவு உட்கொண்டிருந்தார். வீட்டுப் பாடம் சொல்லிய நேரத்தில் முடிக்காததால் தான் அந்த தண்டனை. இப்படி முட்டி போட வைத்தால் அவள் குறித்த நேரத்தில் எழுதிவிடுவாளா என்றேன். நான் ஏதும் சொல்லவில்லை, அவளே தன் தவறுக்காக தனக்குத் தானே தண்டனை கொடுத்துக்கொண்டாள் என்றார் அவளின் தாய். நரம்பில் வென்னீர் ஊற்றியது போல் இருந்தது. கண்களில் நீர் தேங்கியது. இந்த வயதிலேயே குழந்தை தன் இயலாமைகளைத் தோல்வி என்று ஏற்றுக்கொள்கிறது. இயலாமை என்பதும் சரியான வார்த்தை இல்லை. படைப்புகளின் அழகே ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதுதானே. குழந்தை மெதுவாக எழுதுகிறது, கவனத்தை சிதறவிடுகிறாள் என்பதற்காக ஆலோசனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர் அவள் அம்மா. சாத்விகா தனக்கு நிஜமாகவே ஏதோ பிரச்சினை என்று நம்பினாள்.
ஆனால் ஒரு விஷயத்தைக் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆலோசனை மையத்துக்கு அழைத்துச் சென்ற பிறகு குழந்தையிடம் நிறைய மாற்றம் இருந்தது. எல்லாவற்றிலும் ஒரு ஆர்வம் இருந்தது. உண்மையில் அந்தக் குழந்தையை அப்படிப் பார்த்தது என் வாழ்கையில் சந்தோஷமான தருணம். என்னிடம் படிக்கும் பெண் என்பதை தாண்டி ஏதோ ஒன்று சாத்விகாவை நேசிக்க வைக்கிறது.
நேற்று ஒரு அங்கிளைப் பார்த்தாயே அவர் என்ன சொன்னார் என்று கேட்டேன். கண்களை விரித்து கொண்டு அத்தனை ஆச்சரியமாக சொன்னாள், "அவர் என்னாலும் மற்ற பிள்ளைகளை போல் இருக்க முடியும் என்றார்". கத்தியால் குத்தியது போல் இருந்தது. இந்த ஒரு வார்த்தைக்காக அந்த குழந்தை எத்தனை ஏங்கி இருக்கும். இந்த வார்த்தையை ஏன் ஒருபோதும் அவள் அம்மா சொல்லவில்லை? நாளைக்கு அந்த குழந்தையின் எல்லா வெற்றிக்கும் அந்த பெயர் தெரியாத அங்கிளைத் தான் நினைத்துக் கொள்ளும் அவளின் பெற்றோரை அல்ல, எத்தனை பெரிய கொடுமை. இன்னமும் அந்த அம்மா பிள்ளையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிறு வயதில் சாப்பாடு ஒழுங்காக கொடுக்காததுதான் காரணம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவரின் அபத்தமான எதிர்பார்ப்புகளும் கோபங்களும்தான் காரணம் என்பதை உணரவில்லை.
எதிர்பார்ப்புகள் மட்டும் காரணம் இல்லை, இப்போது உள்ள பல பெற்றோர்களுக்குப் பொறுமை இல்லை. குழந்தை அதன் வயதுக்குரிய இயல்புகளுடன் வளர்வதை பார்க்க பொறுமை இல்லை. உடனடியாக வளர்ந்து விட வேண்டும் எல்லாவற்றையும் உடனடியாய் கற்று கொள்ள வேண்டும் படிக்க வேண்டும், எழுத வேண்டும், வரைய வேண்டும், ஓட வேண்டும், சாப்பிட வேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும் இதில் எதுவும் தப்பு இல்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரே நாளில் கற்று கொள்ள வேண்டும் இதில் எந்த தவறும் செய்து விடகூடாது என்று எதிர்பார்ப்பது தான் சகித்துக் கொள்ள முடியவில்லை . எதாவது தவறு செய்து விட்டால் பெற்றோர்களால் ஏற்க முடியவில்லை.
எனக்கு சிறு வயதில் பேச்சு விரைவாய் வரவில்லை என்று என் குடும்பத்தினர் சொல்லுவது உண்டு. எந்த வாக்கியத்தையும் முழுமையாகச் சொல்ல மாட்டேன் எல்லாவற்றிலும் ஒரு இடைவெளி உண்டு. இது எதுவும் எனக்கு நியாபகம் இல்லை . ஆனால் சில விஷயங்கள் நினைவில் உண்டு. என் அம்மா பிஸ்கட் பாக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு என்னைப் பார்பார். நான் கை நீட்டினால் தர மாட்டார். அழுது அடம் பிடித்தாலும் தர மாட்டார். வாயைத் திறந்து 'எனக்கு அது வேண்டும், பிரித்துக் கொடு' என்று முழுமையாக சொன்னால் மட்டுமே கொடுப்பார். தேவை என்று வந்தால் இயலாமைகளைத் தாண்டி தானே போக வேண்டும். அப்படித் தான் நான் ஒழுங்காக பேசக் கற்றுக் கொண்டேன். நான் தரையில் விழுந்து விட்டால் , என் பாட்டி ஓடி வந்து என்னைத் தூக்கி , இந்த தரை தானே உன்னை விழுக்ச் செய்தது, தரையை அடித்து விடலாம் நீ அழுகாதே என்று தரையை சும்மா தட்டுவார். என் அப்பாவோ "அப்படி சொல்லிக் கொடுக்காதீர்கள், எப்போது விழுந்தாலும் யார் காரணம் என்றே யோசிப்பாள் அவள் விழுந்ததுக்கு அவள்தான் காரணம், விழுந்தால் என்ன தூக்கி விடுவதற்குத் தான் இத்தனை பேர் இருக்கோமே எந்திரித்து ஓடட்டும்" என்றார். அப்போது எனக்கு புரியவில்லை. அப்போது மனதில் ஓடியதெல்லாம் அப்பாவை விட பாட்டிக்குத் தான் என் மீது பாசம் அதிகம் என்று. இப்போது உணர்கிறேன், என் அப்பா எனக்குச் சொல்லித் தந்த முதல் பாடம் ஒவ்வொருநாளும் உணர்கிறேன்.
பெற்றோரின் இந்தப் பொறுமையும் எதார்த்தமும தான் குழந்தைகள் வளர்வதற்கு தேவை. எதிர்பார்ப்புகளும் கனவுகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குழந்தை வளர்வதை ரசியுங்கள். அவர்களின் வெற்றிகளையும் தோல்விகளையும் மதியுங்கள். குழந்தை வளர்வதற்கு நல்ல சூழலை மட்டும் உருவாக்கிக் கொடுங்கள் , விதை போடுவது மட்டும் தான் நம் கடமை. அது மாமரம் ஆக வளரலாம், ரோஜாவாக வளரலாம், வேப்ப மரமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது உங்கள் குழந்தை,உங்களை முழுதாக நம்பும் உங்கள் குழந்தை. அதே நம்பிக்கையை அவர்கள் மீது வையுங்கள்.
சென்னை வந்த இரண்டு வருடத்தில், பல விதமான மனிதர்களை சந்திக்க நேரிட்டது, புதிய புதிய புத்தகங்கள் படிக்க முடிந்தது, சில கலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது, புதிய இடங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. புதிய உலகங்களை அமைப்பதும் உடைப்பதுமாக இருந்தாலும் 20 வயதுக்கு மேலாகியும் எனக்கு இன்று வரை முழுமையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக் கூடியது என் குடும்பம்தான். 8 வயதுக் குழந்தைக்கு என்ன அனுபவம் இருக்க முடியும்? என்ன ஒரு உலகத்தை எதிர்பார்க்க முடியும்? அதற்கு இருக்கும் ஒரே உலகம் பெற்றோர் தான். மற்றவர்கள் வெறும் வழிப்போகர்கள்தான். ஒரு நல்ல குடும்பத்தைக் கூட அமைத்துத் தர முடியவில்லை என்றால் என்ன பயன். நீங்கள் நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள், உங்கள் பிள்ளைகளும் அப்படியே வளரும்.
இறுதியாக, இப்போது தான் நினைவுக்கு வருகிறது . ஒரு முறை சாத்விகாவிடம், சாலையில் ஒருத்தி குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாள். என்ன செய்வாய்? என்றேன். எனக்குத் தெரிந்து யோசிக்காமல் அவள் சொன்ன ஒரே பதில் இதுதான். அந்த குழந்தைக்கு முத்தம் தருவேன் என்றாள். இது வெறும் பதில் இல்லை. அவள் எதற்காக ஏங்குகிறாளோ, எது சந்தோஷமாக இருப்பதற்கு முக்கியம் என்று நினைக்கிறாளோ அதை வெளிப்படுத்துகிறாள். எதிர்பார்ப்பில்லா அன்பை எதிர்பார்க்கும் இந்தக் குழந்தையை நேசிக்காமல் இருக்க முடியுமா? சாத்விக்கு என் முத்தங்கள். என் பெற்றோருக்கு நன்றியாக என் கண்ணீர் துளிகள். நல்ல வேளை நான் 20 வருடங்களுக்கு முன்பே பிறந்து விட்டேன். இல்லையெனில் குழந்தைப் பருவம் என்ற ஒன்றே எனக்கு இல்லாமல் போய் இருக்கும்

No comments:

Post a Comment